புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு
ஒளி இருப்பு விளங்க அது
பட வேண்டும் பொருள் மீது
பட்ட ஒளி விழ வேண்டும்
பார்க்கும் கண் கள்மீது
பார்த்தவர் மதி சொல்லும்
பார்த்தது எது என்று
முழு மதியால் உணர்வோமே
தெரிய வைத்தது ஒளி என்று
ஒளியைப் போல் மொழி துலங்கப்
பேசிப் படித்து எழுதிக் காட்ட
மக்கள் வேண்டும் ஊடகமாய்
காவிச் செல்லக் காவிகளாய்
புலம் பெயர்ந்து வந்தவர்கள்
புலன் இழந்து வீழவில்லை
வந்த இடம் புதிது என்று
வாய் பொத்தி நிற்கவில்லை
புகுந்த நாட்டு மொழியினிலே
புலமை நிலை நிறுத்திவிடு
அத்தோடு தேர்ச்சி பெறு
தமிழ் மொழியில் விரைவாக
இரண்டு மொழி மூன்று மொழி
இளமையிலே கற்ப தெளிது
மானிடரின் மதித் திறனில்
பல மொழிகள் புகுமிலகில்
மொழியார்வம் மிகுந்து விட்டால்
எமையாரும் மிதித்து விடார்
வெறி பிடித்துப் பிதற்றாமல்
வடிவாக வேலை செய்வோம்
நாம் வழங்கா நமது மொழி
நாளைக்கே மறந்துவிடும்
நாள் தோறும் புழங்கினாலோ
நம்மில் நிலை பெற்றுவிடும்
தமிழில் உரை யாடிடுவோம்
தமிழில் உற வாடிடுவோம்
தமிழ் தடக்குப் பட்டு நின்றால்
தெரிந்து கொள்ள முயன்றிடுவோம்
கணினித் தமிழ் யுகத்தினிலே
நமக் கெல்லாம் வலையில் விழும்
தேடிப் பார்க்கக் கூகிள் உண்டு
பகிர்ந்து பேச முகநூல் உண்டு
இத்தனை வாய்ப்பிருந்தும்
வரவில்லைத் தமிழென்றால்
குற்றமது யார் மேலே
குற்றமது யார் மேலே
வீண்புலம்பல் தனை விடுத்து
வீராப்பாய்த் துடித் தெழுந்து
பேசிடுவோம் படித்திடுவோம்
எழுதிடுவோம் நம் தமிழை
நாம் வளர்க்கத் தமிழ் ஒன்றும்
மரமும் அல்ல மகவும் அல்ல
வளர்ந்து நிற்கும் தமிழை நாம்
தினம் புழங்க அது நிலைக்கும்
தமிழ் வாழும் தமிழ் வாழும்
கோடி நூல்கள் கண்ட மொழி
எம்மில் தமிழ் தினம் இணைக்க
தலை நிமிர்ந்து தமிழ் வாழும்
ஒரு ஆண்டு மலருக்காக 2015 இல் எழுதியது
4 comments:
அருமை
--
Jayakumar
jeyakumar varukaikkum paaraaddukkum nanRi.
நன்றி
நன்றி
Post a Comment